செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தற்கொலை

Published On 2021-02-25 07:08 GMT   |   Update On 2021-02-25 07:08 GMT
கிருஷ்ணகிரி அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவராஜ்(29). கூடன்குளம் அணுமின் நிலைய பிலாண்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று (25ம் தேதி) வேப்பனபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில், இவர் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை. எனவே, இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணம் நிறுத்திவிடுவார்கள் என சிவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று காலை தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த சிவராஜ், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர், நேற்று மதியம் தனது வீட்டிற்குள் சென்ற அவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அப்பா நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து, சிவராஜின் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News