குடுமிப்பிடி சண்டை போட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் மீது வழக்கு
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தலைவராக தங்கமணி, (38) என்பவரும், துணை தலைவராக சத்தியபிரியா (32) என்பவரும் இருந்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் குடிநீர் வழங்குவதில் சத்திய பிரியா கணவர் சுப்பிரமணி குளறுபடிகள் செய்வதாகவும் அதனால் ஊருக்கு சரியாக குடிநீர் வழங்க முடியவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள், மற்றும் சிலருடன் தலைவர் தங்கமணி நேரில் துணை தலைவர் சத்தியபிரியா வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய் சண்டை ஏற்பட்டு குடுமிபிடி சண்டையாக மாறியது.
இது குறித்து தலைவர் தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் துணை தலைவர் சத்தியபிரியா மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி ஆகிய இருவர் மீதும் 294 பி, 341, 323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடத்து கொள்ளுதல், காயப்படுத்துதல், கொலை மிரட்டல், ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல் துணை தலைவர் சத்திய பிரியா கொடுத்த புகாரின் பேரில், தலைவர் தங்கமணி, அவரின் கொளுந்தனார் சசிக்குமார், சசிக்குமார் மனைவி பவிதா ஆகிய மூன்று பேர் மீதும் 294,323, 506 (1), ஆபாசமாக பேசுதல், முறையற்று நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குடுமிபிடி சண்டை குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.