செய்திகள்
அம்மன் கோவிலில் தங்கத்தாலி திருட்டு
போச்சம்பள்ளி அருகே அம்மன் கோவிலில் தங்கத்தாலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் பக்தர்கள் சென்றனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கோவிலுக்குள் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.