செய்திகள்
ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 1,300 பேர் கைது
ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 1,300 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரியில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமைகளை பறிக்கும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து தி.மு.க.வின்ர் கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஆ.ராசா எம்.பி. கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.