செய்திகள்
கரடி

கோத்தகிரியில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

Published On 2021-02-13 14:46 IST   |   Update On 2021-02-13 14:46:00 IST
கோத்தகிரியில் கரடிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகள் .உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள பார்வதி (வயது50) என்பவரது வீட்டின் ஜன்னல் கதவுகளை நேற்று நள்ளிரவு மூன்று குட்டிகளுடன் அங்கு வந்த தாய் கரடி உடைத்து வீட்டிற்குள் செல்ல முயன்றது.

கரடிகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வீட்டை விட்டு வெளியே வந்து தீப்பந்தங்களை காண்பித்து கரடிகளை விரட்டினர். இந்த குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் உள்ள சுபாஷ் என்பவரின் பேக்கரியை உடைத்து உள்ளே சென்று பொருட்களை தின்று நாசபடுத்தியது. தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில்கூட வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி கிடக்கும் நிலை நீடித்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இங்கு அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News