செய்திகள்
பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு- காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் குற்றச்சாட்டு
பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.
புதுவை:
ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் சமூக ஊடகத்தில் இணைவோம் என்ற தேர்தல் பிரசார இயக்கம் புதுவையில் நேற்று தொடங்கப்பட்டது. இதனை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், அரசு கொறடா அனந்த ராமன் எம்.எல்.ஏ., சமூக ஊடக பிரிவின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹசிபா அமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அக்கறையின்மை அதிகம் உள்ளது கொரோனா கால நெருக்கடிகள் இதை நமக்கு காட்டியுள்ளன. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் பாதுகாப்பு, மாணவர்களின் கல்வி, பொருளாதாரத்தின் மோசமான நிலை, வேலையின்மை போன்ற பல்வேறு விஷயங்களில் நாங்கள் மக்களின் குரல்களை பிரதிபலித்துள்ளோம்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அரசால் ஜனநாயகத்துக்கு மாசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40 வருடத்தில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எல்லையில் போதிய பாதுகாப்பு இல்லை. அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்புவதை மத்திய அரசு தடுத்து நிறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.