செய்திகள்
இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி சுகாதார ஊழியர்கள் தர்ணா- நோயாளிகள் அவதி
இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவித்தபடி இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், டெல்லி மாநிலத்துக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். இதில் அன்புசெல்வம், சுகாதார கூட்டமைப்பு நிர்வாகிகள் லட்சுமி, சத்தியபிரபா, முருகானந்தம், தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தின் காரணமாக புதுவை அரசு மருத்துவமனைகளில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் வெளிப்புற சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும், உள்புற நோயாளிகளும் கடும் அவதியடைந்தனர்.