ஓசூர் அருகே விபத்து: அரசு பஸ் மோதி குரங்கு பலி - கர்நாடக டிரைவருக்கு அபராதம்
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அம்மாநில அரசு பஸ் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை கனகபுராவை சேர்ந்த ஆனந்த் (வயது 28) என்பவர் ஓட்டினார்.
பிலிகுண்டுலு அருகே பஸ்சை நிறுத்தி விட்டு வனப்பகுதி சாலையோரம் நின்ற குரங்குகளுக்கு டிரைவர் ஆனந்த் பழங்களை கொடுத்தார். பின்னர் பஸ்சை எடுத்த போது, பஸ்சில் அடிபட்டு 3 வயதான பெண் குரங்கு பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் கர்நாடக மாநில பஸ்சை பறிமுதல் செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆனந்த் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி அஞ்செட்டி வனத்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிரைவர் ஆனந்த்துக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தியதால் பஸ் விடுவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து பஸ்சில் அடிபட்டி பலியான குரங்கின் உடலை அஞ்செட்டி வனச்சரக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.