செய்திகள்
கோப்புப்படம்

பழனியில் குடிநீர் கேட்டு மறியல்- போலீஸ் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்

Published On 2021-01-30 08:18 GMT   |   Update On 2021-01-30 08:18 GMT
பழனி அருகே குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:

பழனி அருகே உள்ள ஜவஹர் நகரில் கடந்த 1 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோதை மங்கலம் ஊராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று பழனி-தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குடிநீர் வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறியதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட சிலரை போலீசார் தங்கள் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீஸ் வாகனத்தையும், பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News