செய்திகள்
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கூத்தூர் சுடுகாடு அருகில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், கீழ்வேளூர் அருகே சொட்டா£ல் வன்னம் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜ்குமார் (வயது37) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஓர்குடி சுடுகாடு அருகே சாராயம் விற்ற கடமங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் நாவலன் (22), ராதாமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மனைவி சாராதாம்பாள் (66) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.