செய்திகள்
டிராக்டரில் ஊர்வலம் வந்த மணமக்கள்.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலம் வந்த மணமக்கள்

Published On 2021-01-26 13:29 IST   |   Update On 2021-01-26 13:29:00 IST
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிராக்டரில் மணமக்கள் ஊர்வலமாக வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
களியக்காவிளை:

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததையடுத்து விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டிராக்டர்களுடன் பேரணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அருமனை அருகே மாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பலக்காலை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஜெரின் டிராக்டரில் சென்று திருமணம் செய்தார். இதற்காக பாத்திமாநகரை சேர்ந்த மணமகள் பபி வீட்டுக்கு உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். அந்த டிராக்டர் வாழை குலை, பலாபழம், வைக்கோல் போன்ற பொருட்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது.

அங்கு திருமணம் முடிந்த பின்பு மணமக்கள் டிராக்டரில் ஊர்வலமாக அம்பலக்காலைக்கு திரும்பினர். இதுகுறித்து மணமகன் ஜெரின் கூறும்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளுக்கு உதவும் டிராக்டரில் சென்று திருமணத்தை நடத்தியதாகவும், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், கூறினார்.

Similar News