செய்திகள்
கள்ளத்தொடர்பை கிராம மக்கள் கண்டித்ததால் அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
கள்ளத்தொடர்பை கிராம மக்கள் கண்டித்ததால் ஊத்தங்கரை அருகே தொழிலாளியுடன் விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர் பரிதாபமாக இறந்தார். தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊத்தங்கரை:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் குள்ளம்மாள் (வயது 42). அங்கன்வாடி பணியாளர். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில் குள்ளம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி பழனி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கேயே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். இதனால் குள்ளம்மாள், பழனி 2 பேரும் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குள்ளம்மாள் பரிதாபமாக இறந்தார். பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குள்ளம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கள்ளத்தொடர்பை கிராம மக்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.