செய்திகள்
செந்துறை சாலை மற்றும் ராஜாஜிநகர் சாலையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உண்ணும் மாடுகளை படத்தில் காணலாம்.

அரியலூரில் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகள்- மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம்

Published On 2021-01-24 12:16 GMT   |   Update On 2021-01-24 12:16 GMT
அரியலுரில் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை வித்தது. அதன் பிறகு, மளிகை காய்கறி, உணவு விடுதிகள், மற்ற பிற நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொடுப்பது அதிக அளவில் குறைந்தது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து 70 சதவீத அளவிற்கு பயன்பாடு குறைந்து.

பொதுமக்களும் பொருட்கள் வாங்க துணி பைகள், பாத்திரங்கள் எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர் கொரோனா ெதாற்றால் வணிக நிறுவனங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தன. பின்பு கடைகள் திறக்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமானது அதிகாரிகள் நோய்தொற்றை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்கவில்லை. இதனால் அரியலூர் நகரில் தற்பொழுது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் தான் வலம் வருகின்றன.

மளிகை, காய்கறி, உணவு விடுதிகள், மாமிச கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகிறது அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. நகரின் முக்கிய வீதிகளில் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கபட்டு பின்னர் சாலையில் கொட்டப்படுவதால் நகராட்சி தொழிலாளர்கள் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் உடனே அந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்கொட்டப்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்த பிளாஸ்டிக் பைகளை சாலையோரங்களில் மேயும் மாடுகள் தின்று வருகிறது. இதனால் அந்த மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாடுகள் பல்வேறு ேநாயால் பாதிக்கப்பட்டு ரோட்டில் நடக்கமுடியாமல் பரிதாபமாக திரிகிறது. எனவே கால்நடைகளையும், நகரின் சுகாதாரத்தையும் காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை மீண்டும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News