செய்திகள்
நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி: கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் அருகே உள்ள ராம்நகரை சேர்ந்தவர் சவுந்தர ராஜன். இவரது மனைவி பூங்கோதை (வயது47). இவருக்கு சொந்தமான 37 ஏக்கர் 52 சென்ட் நிலம் சேத்தூர் பகுதியில் உள்ளது. இதில் 21 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை ஈரோட்டை சேர்ந்த நிலதரகர் செல்வின்ராஜ் மூலம் சேலத்தை சேர்ந்த கோகிலா என்பவர் ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வீதம் விலை பேசி வாங்கி உள்ளார். பத்திரப்பதிவின்போது அரசு வழிகாட்டுதல் மதிப்பீட்டின் படி ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகிலாவின் கணவர் ஜெகநாதன் ரூ.1 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்துக்கு அரியானா மாநிலத்தில் உள்ள வங்கி வரைவோலை கொடுத்துள்ளார். இந்த வரைவோலையினை சவுந்தரராஜன், வங்கி கணக்கில் போடுவதற்கு சென்றபோது அந்த வரைவோலை போலியானது என தெரியவந்தது. இதுபற்றி ஜெகந்நாதனிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈரோட்டை சேர்ந்த நில புரோக்கர் செல்வின் ராஜ், நிலத்தை கிரையம்பெற்ற சேலத்தை சேர்ந்த கோகிலா, அவரது கணவர் ஜெகநாதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.