பெண்ணாடம் அருகே வாய்க்காலில் விழுந்த 1½ வயது குழந்தை பலி
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 1½ வயதில் இரணியன் என்ற ஆண்குழந்தை இருந்தது.
நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயகிவிட்டது. இதைத் தொடர்ந்து வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தையை பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் குழந்தை விழுந்திருக்கலாம் என கருதி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க் கால் மற்றும் அங்குள்ள பகுதிகளில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
மேலும் மாயமான குழந்தையை கண்டுபிடிப்பதற்காக விருத்தாசலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடினர்.
இன்று காலைவீட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் வெலிங்டன் பாசன கால்வாயில் குழந்தை இரணியன் பிணமாக மிதந்தான். இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விளையாடிய குழந்தை இரணியன் வாய்க்காலில் தவறி விழுந்ததில் அடித்து செல்லப்பட்டான்.
தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.