செய்திகள்
ரேஷன் கடையில் தரம் குறைந்த அரிசி வழங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல்
ரேஷன் கடையில் தரம் குறைந்த பழுப்பு நிற அரிசி வழங்கியதால் பொதுமக்கள் செம்பதனிருப்பு கடைத் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருகே மேல்நாங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் நேற்று காலை பொதுமக்கள் அரிசி வாங்க வந்தனர். அப்போது அவர்களுக்கு விற்பனையாளர் தரம் குறைந்த மற்றும் பழுப்பு நிறமாக காணப்பட்ட அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பதனிருப்பு கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சீர்காழி தாசில்தார் ஹரிதரன், வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், கிராம முக்கியஸ்தர் முத்து ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.