செய்திகள்
கழுக்காணி முட்டம் ஸ்ரீநகரில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்
ஸ்ரீநகரில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் ஊராட்சி கழுக்காணி முட்டம் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2 மாதங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள பெரியகுளத்தில் நீர்நிரம்பி சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது.
ஸ்ரீநகரில் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. தெருவிளக்கு வசதியும் இல்லை. தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழைநீர் சேகரிக்கப்பட்டு பெரியகுளம் நிரம்பி வழிந்து ஸ்ரீநகர் முழுவதும் தேங்கியது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்காக வீட்டின் வாசலில் தேங்கியுள்ள சேறும் சகதியுமாக உள்ள மழை நீரில் தான் சென்று வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக மழை நீர் தேங்கி இருப்பதால் நீரின் மேல் பாசிகள் படர்ந்து காணப்படுகின்றன. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் ஸ்ரீநகரில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.