செய்திகள்
மயிலாடுதுறையில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 2½ பவுன் நகை திருட்டு
மயிலாடுதுறையில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 2½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பர்மா காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 41). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பூம்புகாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். மறுநாள் வீடு திரும்பிய நடராஜன் கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 1½ பவுன் சங்கிலி, மற்றொரு 1 பவுன் சங்கிலி மொத்தம் 2½ பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் என்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடராஜன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.