செய்திகள்
கொலை

கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

Published On 2021-01-19 08:58 GMT   |   Update On 2021-01-19 08:58 GMT
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று மேலவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அங்கு நேற்று மாலை அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் அவர்கள், பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றனர். அவ்வழியே சென்றவர்கள், உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News