செய்திகள்
நரிக்குடி அருகே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை
நரிக்குடி அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:
நரிக்குடி அருகே மறையூர், சேதுராயனேந்தல், நெடுகனேந்தல், மாயலேரி ஆகிய கிராமங்களில் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து, மழைநீரில் மூழ்க ஆரம்பித்து விட்டன.
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து மறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட மறையூர், சேதுராயன், ஏந்தல், நெடுகநேந்தல்மாரி ஆகிய கிராமங்களில் நெற்பயிர்கள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு மிகவும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததை பற்றி வேளாண்மை துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று மனுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.