ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர் மழை- வீட்டு சுவர் இடிந்து பெண் பலி
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்ப நாயக்கன் பேட்டை கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45), விவசாய கூலித்தொழிலாளி.
இவர்களுக்கு தினேஷ் குமார் (22) என்ற மகன் உள்ளார். சேகர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜேஸ்வரி விவசாய தொழிலுக்கு சென்றதுடன் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று இரவு ராஜேஸ்வரி தனது வீட்டில் படுத்து இருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் வளர்த்த 3 மாத ஆட்டுக்குட்டி ஒன்றும் அவர் அருகிலேயே படுத்து இருந்தது. அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து போனது. இது குறித்து அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.