செய்திகள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்
பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர்.
இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிருமிநாசினிகள் மூலம் பக்தர்கள் கைகள் சுத்தம் செய்யப்பட்ட பிறகே அவர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடிய பின்னர் மலை ஏற ஆரம்பித்தனர்.
தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.