செய்திகள்
லாரி டிரைவர், கிளீனரிடம் செல்போன் பறித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

சேதராப்பட்டில் லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன் பறிப்பு- 3 பேர் கைது

Published On 2021-01-09 02:58 IST   |   Update On 2021-01-09 02:58:00 IST
சேதராப்பட்டில் லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
காலாப்பட்டு:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 31). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து புதுவை துத்திப்பட்டில் உள்ள கண்ணாடி பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியில் வந்தார். கிளீனர் சம்பத் (28) உடனிருந்தார்.

இரவு நேரமாகிவிட்டதால் சேதராப்பட்டு - கரசூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவரும், கிளீனரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் முகவரி கேட்பதுபோல் நடித்து முருகானந்தம், சம்பத்திடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச்சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், நடந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனியார் நிறுன மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மேலாளர் மோகன்ராஜ் (42) செல்போன் பறித்து சென்றவர்களின் கார் பதிவு எண்ணுடன் சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த கார் புதுவை நயினார்மண்டபத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, காரை அவசர தேவையாக ரோடியர் பேட்டை சேர்ந்த டிரைவர் மாயவன் (33) வாங்கிச் சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாயவனை பிடித்து விசாரித்ததில், அவரது கூட்டாளிகளான பெயிண்டர் வெங்கடேசன் (30) மற்றும் டிரைவர்கள் பிரபா (27), சுதாகருடன் (28) சேர்ந்து லாரி டிரைவர், கிளீனரிடம் செல்போனை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து மாயவன், வெங்கடேசன், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள பிரபாவை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News