செய்திகள்
போலீசார் விசாரணை

புதுவை பெண் கலெக்டருக்கு வி‌ஷ குடிநீர் விநியோகம்- திட்டமிட்ட சதியா? போலீசார் விசாரணை

Published On 2021-01-08 15:22 IST   |   Update On 2021-01-08 15:22:00 IST
பெண் கலெக்டருக்கு நச்சுத்தன்மை கலந்த திரவம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கவர்னர் கிரண்பேடி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து இன்று போராட்டம் நடந்தது.

போராட்டத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வழுதாவூர் ரோட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பூர்வா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு தனியார் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதில் கலெக்டர் பூர்வா கார்க் தனக்கு வந்த பாட்டிலை திறந்தபோது எரிசாராய வாசனை அடித்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த கலெக்டர் பூர்வா கார்க் அதனை அருந்தாமல் அலுவலக அதிகாரிகளிடம் விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மற்ற பாட்டில்களை பரிசோதித்த போது அவற்றில் குடிநீர் இருந்தது. கலெக்டருக்கு வழங்கப்பட்ட பாட்டில் குடிநீர் மட்டும் வி‌ஷ தன்மையுடன் இருந்தது. குடிநீர் தண்ணீர் போலவே இருந்ததால் ஊழியர்கள் குடிநீர் பாட்டில் என நினைத்து விநியோகம் செய்திருந்தனர்.

இதுகுறித்து கலெக்டரின் சிறப்பு அதிகாரி சுரேஷ் ராஜ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து அந்த பாட்டிலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

குடிநீர் பாட்டிலில் வி‌ஷம் கலக்கப்பட்டதா? அல்லது எரிசாராயம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதா? எனவும், குடிநீரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தவர்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் கலெக்டருக்கு நச்சுத்தன்மை கலந்த திரவம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கவர்னர் கிரண்பேடி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News