செய்திகள்
சிவகாசி நகராட்சிக்கு நிரந்தர என்ஜினீயர் நியமிக்கப்படுவாரா? காங்கிரஸ் வலியுறுத்தல்
சிவகாசி நகராட்சிக்கு நிரந்தரமாக என்ஜினீயரை உடனே நியமிக்க வேண்டும் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
சிவகாசி:
சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சபையர் ஞானசேகரன், முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி சிவகாசி ஆகும். இங்குள்ள நகராட்சி என்ஜினீயர் கடந்த 1½ மாதங்களாக விடுமுறையில் இருக்கிறார். அவருக்கு பதில் ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் என்ஜினீயர் வாரத்திற்கு ஒரு முறை வந்து தனது பணியினை செய்துவிட்டு செல்கிறார். இதனால் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்யும் வளர்ச்சி பணிகள் தாமதம் ஆகிறது. மேலும் சிவகாசி நகராட்சியின் நூற்றாண்டு நிதியாக ரூ.50 கோடி அரசு ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிவகாசி நகராட்சிக்கு நிரந்தரமாக என்ஜினீயரை உடனே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.