செய்திகள்
சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததை படத்தில் காணலாம்

சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

Published On 2021-01-05 20:25 IST   |   Update On 2021-01-05 20:25:00 IST
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி:

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சுக்கிரவார்பட்டி. இந்த பஞ்சாயத்து அலுவலகம் தற்போது ஒரே ஒரு அறையில் இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பஞ்சாயத்து கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. புதிதாக பதவி ஏற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாயத்து கூட்டத்தின் போது புதிய அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி வைத்தனர். 

ஆனால் மாவட்ட நிர்வாகம் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்ட போதிய நிதி ஒதுக்கி ஆணை பிறப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் அதீவிரன்பட்டி செல்வம் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இருந்தனர். அப்போது திடீரென பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரையில் உள்ள பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்டு புதிய அலுவலகம் கட்ட நடவடி்க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News