செய்திகள்
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த ஒரு மினி வேனை போலீசார் சைகை காட்டி நிறுத்தினார். வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்களின்றி, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த வேன் டிரைவர் சகாதேவன் (வயது 21), வெண்பாக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி (21) மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேர், 17 வயது சிறுவன் என 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள், டிஜிட்டல் தராசு, 5 செல்போன்கள், ரூ.1060, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.