செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்தவர் கைது
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் செல்ல வந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த சையத் முகமது (வயது 35) என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் அவர், வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி, போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சையத் முகமதுவின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் முகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.