செய்திகள்
கோத்தகிரி அருகே கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
கோத்தகிரி அருகே கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (வயது 20). இவர் மேட்டுப்பாளையத்தில் தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நர்மதா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரகுராமுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்த ரகுராம் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவருடைய தாயார் கேட்டு உள்ளார்.
இதனால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ரகுராம், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகே நின்று கொண்டு என்னை திட்டினால் உள்ளே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் கிணற்றுக்குள் குதித்தார். உடனே இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோத்தகிரி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ரகுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.