செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

திருநள்ளாறு கோவிலில் குறைந்த பக்தர்களுடன் சனிபெயர்ச்சி விழா - கவர்னர் கிரண்பேடி தகவல்

Published On 2020-12-25 13:51 IST   |   Update On 2020-12-25 13:51:00 IST
சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

காரைக்கால்:

புதுவை மாநில் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27- ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சிவிழா நடைபெறவுள்ளது. அப்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு 48 மணி நேரம் முன்பும், 48 மணி நேரம் பின்பும், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் வக்கீல் நாதன் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின் முடிவில், கொரோனா விதிகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்திருந்தார்.

மேலும் கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகிய 5 பேர் கொண்ட குழு, விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்களுக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி, புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மாவட்ட துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், வழக்கு தொடுத்த. வக்கீல் நாதன் ஆகிய 5 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் அருகே தரங்கம்பாடியில் நடந்தது.

கூட்டம் முடிந்த பின்னர் கவர்னர் கிரண் பேடி திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறுகையில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனி பெயர்ச்சிவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், பக்தர்கள் எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Similar News