செய்திகள்
சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற கால அவகாசம் வழங்கப்படுமா?
சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கான கால அவகாசத்தினை நீட்டித்து தரவேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:
தமிழகத்தில் அனைத்து குடும்பத்தினரும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் அரிசி ரேஷன் கார்டுகள் மற்றும் சர்க்கரை ரேஷன் கார்டுகள் என தற்போது பயன்பாட்டில் உள்ளது. அரிசி ரேஷன் கார்டு பெற்றவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் அரசு வழங்கும் உதவித்தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை கார்டு பெற்றவர்கள் அரிசி உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்களை வாங்க இயலாது. சர்க்கரை மட்டும் கூடுதலாக இவர்களுக்கு வழங்கப்படும். தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ரூ.2,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனுடன் பொங்கல் தொகுப்பு பொருள்களும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பெரும்பாலான சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்ட நிலையில் அவர்களும் தங்கள் காடுகளை அரிசி ரேஷன் கார்டுகள் ஆக மாற்றி பெறுவதற்கு கால அவகாசம் இல்லாத நிலை உள்ளது.
மேலும் தற்போது பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இனிவரும் காலங்களில் அரசு வழங்கும் உதவிகளை முழுமையாக பெறுவதற்கு அரிசி ரேஷன் கார்டுகள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டு விட்ட நிலையில் அனைத்து சர்க்கரை ரேஷன் கார்டுகளும், அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றி பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே தமிழக அரசு சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்கள் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகள் ஆக மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், இதற்கான வாய்ப்புகளை தர வேண்டியது அவசியமாகும்.