செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்
சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 27 வியாபாரிகளுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி:
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
அதேபோல விற்பனை செய்பவர்கள் மீதும், பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலித்து வருகிறது.
இந்தநிலையில் சிவகாசி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துசெல்வம் தலைமையில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேஷ்குமார் ஆகியோர், மேற்பார்வையாளர் முத்துராஜ் அடங்கிய குழுவினர் நகரின் பல்வேறு பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் 27 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வியாபாரிகள் 27 பேரிடம் இருந்து ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.