செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

Published On 2020-12-24 04:35 IST   |   Update On 2020-12-24 04:35:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 45 ஆயிரத்து 33 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவானது.

15 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,765 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 92 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.

மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

1,460பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 2,700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் பரிசோதனை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

தமிழக அரசு இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்டத்தில் அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் மாவட்ட மக்களிடையே புதிய வைரஸ் தொற்று காரணமாக நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்தவர்களில் மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு பொது இடங்களில் நோய் தடுப்பு வழி முறைகளும் முறையாக பின்பற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மெத்தனப்போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

Similar News