செய்திகள்
யானைகள்

தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்- கிராம மக்கள் பீதி

Published On 2020-12-23 06:44 GMT   |   Update On 2020-12-23 15:03 GMT
ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப் பகுதிகளில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப்பெயர்ச்சியாகி முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் கூட்டம் பல குழக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன. ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம், தேனிக்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் பகல் நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.

இந்த நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையை கடந்து சென்றன.

இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் புழுதியை கிளம்பியப்படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இடைவெளி விட்டு கடந்து சென்றன.

இதை அப்பகுதி மக்கள், செல்போனில் வீடியோ எடுத்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஆங்காங்கே தனித்தனி குழுக்களாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகி றார்கள்.

இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

Tags:    

Similar News