செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-12-23 08:07 IST   |   Update On 2020-12-23 08:07:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 653 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 222 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 92 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.

இந்த நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது. 1,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்பட வில்லை.

மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பது இல்லை. பரிசோதனை முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது.

மாவட்ட நிர்வாகமும் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறையை அறிவுறுத்துவது இ்ல்லை.

இம்மாவட்டத்தில் 322 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 92 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 228 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து ஒரு கிராமம் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த கிராமத்திலும் விதிமுறைப்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா, நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதும் உறுதி செய்யப்படாத நிலையே இருந்து வருகிறது.

நோய் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படாததால் மாவட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளைப் பற்றிய தகவலும் தெரியாமலேயே போய்விடுகிறது இதனால் மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.

குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகம் பொது இடங்களிலாவது நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Similar News