செய்திகள்
ஈரோட்டில், தி.மு.க. மகளிர் அணியினர் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கியாஸ் சிலிண்டர்களுடன் வந்து கோஷம் எழுப்பினார்கள்.
ஈரோடு:
நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மகளிர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகலில் நடந்தது. தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களுடன் வந்து கோஷங்கள் எழுப்பினார்கள். சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்களுக்கு துன்பம் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேர்தலுக்கு முன்பு, விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றெல்லாம் கூறினார்கள்.
நாம் இன்று கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் செய்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கியாஸ் விலை உயர்ந்தால் என்ன?. அதை வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைத்து பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
மோடி அரசாங்கம் அத்தியாவசிய பொருள் பட்டியலில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை எடுத்து விட்டதால் பதுக்கல் அதிகரிக்கும். விறகு அடுப்பில் சமைக்க பழகிக்கொண்டாலும் சமைக்க அரிசி பருப்பு இருக்காது. சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசுக்கு தமிழக அ.தி.மு.க. அரசு ஆதரவாக இருக்கிறது. அந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இளமதி வரவேற்று பேசினார். மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் குமார் முருகேஷ், துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பொ.ராமசந்திரன், அக்னி சந்துரு, வி.சி.நடராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் மதன்மோகன், பொன்பூபதி, மகளிர் தொண்டர் அணி மாநகர பொறுப்பாளர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.