செய்திகள்
கொலை

பெருந்துறையில் நள்ளிரவில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

Published On 2020-12-21 08:04 GMT   |   Update On 2020-12-21 08:04 GMT
பெருந்துறையில் நள்ளிரவில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்களப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற முத்துப்பாண்டி வயது(30). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முத்துப்பாண்டியின் மனைவி சூர்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி ஸ்லேடர்நகர் என்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிமெண்ட் ஷீட் பொருத்தும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் துடுப்பதி செல்லும் சாலையில் சானடோரியம் அருகில் முத்துப்பாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மது குடிக்கும் தகராறில் அவருடன் வேலை பார்க்கும் சிலர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News