செய்திகள்
பெருந்துறை அருகே விபத்தில் வாலிபர் பலி
பெருந்துறை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கோபி. அவருடைய மகன் செல்வராஜ் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் தற்போது கோவையில் தங்கி வேலை செய்து வந்தார். செல்வராஜ் தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக, கடந்த 17-ந் தேதி இரவு, மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, ஓலப்பாளையம் பிரிவு அருகே அவர் சென்றபோது மோட்டார்சைக்கிளும், அந்த வழியாக வந்த ஒரு வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு் நிற்காமல் சென்ற வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.