செய்திகள்
வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்த நாராயணசாமி

உண்ணாவிரத போராட்ட முடிவில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்த நாராயணசாமி

Published On 2020-12-19 12:39 IST   |   Update On 2020-12-19 12:39:00 IST
உண்ணாவிரத போராட்ட முடிவில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்-அமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்தார். இதன் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை அண்ணாசிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலையில் நிறைவடைந்தது. முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், புதுவை கவர்னர் கிரண்பேடி செயல்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது:-

மதசார்பற்ற அணியில் கருத்து வேறுபாடு இல்லை. மதசார்பற்ற அணி ஒருங்கிணைந்து புதுவையை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வருகிறது. புதுவைக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரை மோடி இரண்டாக உடைத்து யூனியன் பிரதேசமாக்கினார். அதேபோல் புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும். அதனை எதிர்க்க மதசார்பற்ற அணியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும். தமிழகத்தோடு இணைத்தால் புதுவையின் தனித்தன்மை போய் விடும். தனித்தன்மையை காக்க உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது திடீரென மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்-அமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்தார். இதன் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் குளிர்பானம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர்.

Similar News