செய்திகள்
சித்ரா-ஹேம்நாத்

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை

Published On 2020-12-17 07:54 GMT   |   Update On 2020-12-17 07:54 GMT
நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.

சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது.

முழு விசாரணை முடிந்த பிறகு தான் ஆர்.டி.ஓ. விசாரணையில் ஹேம்நாத் என்ன சொல்லி இருக்கிறார்? என்பது தெரியவரும்.

சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News