செய்திகள்
பணம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- சார் பதிவாளர் வீட்டில் ரூ.11½ லட்சம், 114 பவுன் நகை சிக்கியது

Published On 2020-12-16 16:59 IST   |   Update On 2020-12-16 16:59:00 IST
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ.11½ லட்சம், 114 பவுன் நகை சிக்கியது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்தின் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி துருவி தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11½ லட்சம், 114 பவுன் தங்க நகை போன்றவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் தாணு மூர்த்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News