செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அம்மையார் நகர் அன்னைதெரசா வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ்குமார் (வயது 29). இவர், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டி சரோஜாவை (74) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ஒப்பிலார் மணியர்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
பாரதியார் வீதி வேட்டைக்காரன் தெருவில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சரோஜா திடீரென்று நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரோஜாவை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.