செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.23½ லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-14 00:45 GMT   |   Update On 2020-12-14 00:45 GMT
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கலில் ரகுமான் (வயது 49) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 160 கிராம் எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றினார்கள்.

பின்னர் பயணிகள் இறங்கி சென்றதும் அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 310 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதை துபாயில் இருந்து கடத்தி வந்த நபர், சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News