செய்திகள்
சென்னை ஐகோர்ட்

புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2020-12-13 07:04 IST   |   Update On 2020-12-13 07:04:00 IST
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கவேண்டும் என்றும், இந்த கல்லூரிகளில் 55 இடங்கள் மட்டுமே அரசு ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

2006-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த கல்லூரிகளில் உள்ள 150 இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு தரப்பில், மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை வழங்க மறுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பிலும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க 2006-ம் ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒப்புக்கொண்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Similar News

வடம்- Movie Review