செய்திகள்
கோப்புபடம்

நெகமம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-05 16:25 GMT   |   Update On 2020-12-05 16:25 GMT
நெகமம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெகமம்:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோழித்துறை பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது 25), இவர் அதே பகுதியில் அட்டாடி ஊரைச்சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ரம்யா நடத்தையில் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அத்துடன் ரம்யாவை மூர்த்தி அடித்து துன்புறுத்தியும் வந்ததாக தெரிகிறது. இதனால் ரம்யா, கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்தார்.

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த தர்மராஜ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரம்யா, 2-வதாக தர்மராஜை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது 2 குழந்தைகளுடன் தர்மராஜூடன் வசித்து வந்தார்.

பின்னர் அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள மெட்டுவாவிக்கு வந்தனர். அங்குள்ள கரையாம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி இருந்து கணவன்-மனைவியும் சேர்ந்து கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்யாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி (மாரடைப்பு) ஏற்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து தர்மராஜ் அதிர்ச்சி அடைந்தார். தனது கண்முன்பே மனைவி ரம்யா, நெஞ்சுவலியில் இறந்துபோனதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உடனே அவர் இரவில் தனது மாமியாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நெஞ்சுவலியில் ரம்யா இறந்ததை தெரிவித்தார். பின்னர், ரம்யா இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனவே அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்கிறேன், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

பின்னர் அவர் வீட்டில் ரம்யாவின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தாயார், தர்மராஜின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் உறவினர்களுடன் மெட்டுவாவி வந்து பார்த்தபோது ரம்யா இறந்து கிடந்த இடத்தின் அருகிலேயே தர்மராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நெகமம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல், கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News