செய்திகள்
கொலை மிரட்டல்

கடன் தொல்லையால் ஊழியர் தற்கொலை: பணத்தை திருப்பிகேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்

Published On 2020-12-02 09:38 GMT   |   Update On 2020-12-02 09:38 GMT
கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மனைவியிடம் பணத்தை வட்டியுடன் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாகூர்:

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). இவர்கள் தவளக்குப்பத்தை அடுத்த ஸ்ரீ்நிவாசா கார்டன் வைஷ்ணவிபுரத்தில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த ஜெயக்குமார் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து அவரது மனைவி தேன்மொழி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி தவளக்குப்பம் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திருமலைவாசன் நகரை சேர்ந்த சிவா ஆகியோர் தேன்மொழி வீட்டிற்குச் சென்று ஜெயக்குமார் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் கேட்டு தகராறு செய்தனர்.

அப்போது அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மோட்டார் சைக்கிள், வெள்ளி குத்து விளக்குகள், 2 தங்க கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதனை தடுத்த தேன்மொழியை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் தேன்மொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News