செய்திகள்
ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்

விருத்தாசலத்தில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2020-12-02 05:27 GMT   |   Update On 2020-12-02 05:27 GMT
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை விருத்தாசலம் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
விருத்தாசலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி சத்யா (வயது 25). இவர் கடந்த 23.4.2016 அன்று தனது மாமனார் கொளஞ்சி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

வேப்பூர் நோக்கி சென்ற போது கண்டப்பங்குறிச்சி அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் கொளஞ்சி பலியானார். சத்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வழக்கு விருத்தாச்சலம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் விபத்தில் காயமடைந்த சத்யாவிற்கு ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 600 மற்றும் வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனால் இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் வழங்காததால் வக்கீல்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் ஜப்தி நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்தனர்.

அதனை ஏற்ற நீதிபதி இளவரசன் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட ஏதேனும் ஒரு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை விருத்தாசலம் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News