செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் வேப்பமரத்தில் தூக்குப்போட்ட தனியார் நிறுவன உரிமையாளர்

Published On 2020-12-01 15:37 GMT   |   Update On 2020-12-01 15:37 GMT
கடலூரில் வேப்பமரத்தில் தூக்குப்போட்ட தனியார் நிறுவன உரிமையாளரை ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.
கடலூர்:

கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நாகராஜன். இவர் சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது உப்பனாறு பாலம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் விரைந்து சென்று அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தனியாக அவரை மரத்தில் இருந்து கீழே இறக்க முடியவில்லை. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களை அழைத்து, அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பெரியமுதலியார்சாவடி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற பார்த்திபன் (வயது 31) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் சண்டை போட்டு விட்டு சுபஉப்பலவாடியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு வந்ததும், இங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மரத்தில் தூக்குப்போட்டதால் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் சுரேஷ், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் சுரேசை சரியான நேரத்தில் மீட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜனை நேற்று அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து, பாராட்டி சால்வை அணிவித்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ் புதுச்சேரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News