செய்திகள்
கடலூர் முதுநகரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - 4 வாலிபர்கள் கைது
கடலூர் முதுநகரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் சக போலீசாருடன் சுத்துக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கபிள்ளை மகன் செந்தில் (வயது 36), பீமாராவ்நகர் செல்வராஜ் மகன் சிலம்பரசன் (36), செல்லியம்மன் கோவில் தெரு செல்வம் மகன் அன்பரசன் (34), எழில்தாஸ் மகன் வேல்பிரகாஷ் (28) ஆகிய 4 பேரும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த விஜயகுமார் அவர்களிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது பற்றி விஜயகுமார் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.