செய்திகள்
உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி மாணவன் பலி

Published On 2020-11-30 05:07 GMT   |   Update On 2020-11-30 05:07 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காட்டுமன்னார்கோவில்:

சிதம்பரம் அருகே ஓமகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 40). இவருடைய மகன் ஹரி கணேஷ்(15). இவன் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள உறவினர் அஜய் வீட்டுக்கு ஹரி கணேஷ் சென்றிருந்தான். நேற்று மதியம் அஜய் மற்றும் ஹரிகணேஷ், வீராணநல்லூர் பகுதியில் உள்ள வடவாற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

இந்த நிலையில் ஹரிகணேஷ், வடவாற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கினான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடினர். இருப்பினும் ஹரிகணேஷ் கிடைக்கவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி ஹரிகணேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அவனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து ஹரிகணேசின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News